ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட 972 பேரை கொலை செய்ய பி.எப்.ஐ., சதி

49


கொச்சி: தடை செய்யப்பட்ட இயக்கமான பி.எப்.ஐ., எனப்படும், 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பினர், ஓய்வுபெற்ற நீதிபதி உட்பட, 972 பேரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.

கேரளாவில், 2022ல் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த தலைவராக இருந்த சீனிவாசன் என்பவரை, ஒரு கும்பல் கொலை செய்தது.

விசாரணை



இதுதொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியதில், பி.எப்.ஐ., அமைப்பினர் அவரை கொலை செய்தது தெரிந்தது.


இதுதொடர்பாக, அந்த அமைப்பைச் சேர்ந்த, 15 பேரை போலீசார் கைது செய்தனர்.



இந்நிலையில், ஜாமின் வழங்கக்கோரி அவர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல்
செய்தனர்.


இவ்வழக்கு விசாரணையின் போது, அவர்களுக்கு ஜாமின் வழங்க என்.ஐ.ஏ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பி.எப்.ஐ., அமைப்பினரின் செயல்திட்டங்களை விளக்கும் வகையில் அறிக்கை ஒன்றையும் நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையின் விபரம்:



பி.எப்.ஐ., அமைப்பினர், செய்தியாளர்கள் குழு, ஆயுத பயிற்சி குழு, சேவை குழு என மூன்று பிரிவுகளாக இயங்கி வருகின்றனர்.


இதில் செய்தியாளர்கள் குழு, சமூகத்தில் பிரபலமானவர்களின் பட்டியலை சேகரித்து, ஒவ்வொரு மாவட்ட தலைமைக்கும் அனுப்பும்.



அதில், சேகரிக்கப்படும் நபர்களின் அன்றாட பணிகள், வயது, புகைப்படம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. குறிப்பாக, ஹிந்து மத தலைவர்கள் பற்றிய விபரங்கள் உள்ளன.


இத்தகவல்கள் அனைத்தும் மாநில தலைமைக்கு பகிரப்படும். தனிப்பட்ட நபர்கள் மீது தாக்குதல் நடத்த, அந்த அமைப்பின் பயங்கரவாத குழு பயன்படுத்தப்படும்.



சீனிவாசன் வழக்கில் கைதான நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் வாயிலாக, பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டன.

பட்டியல்



அதில், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி உட்பட, 972 பேரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய பட்டியல் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பதாக கூறி, நம் நாட்டில் பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள் இயங்க, ஐந்து ஆண்டுகள் தடைவிதித்து 2022 செப்டம்பரில் மத்திய அரசு உத்தரவிட்டது.

Advertisement