வாலிபர் வாக்குவாதத்தால் காங்., - எம்.எல்.ஏ., கடுப்பு

பாவூர்சத்திரம்:பூமி பூஜை நிகழ்ச்சிக்கு வந்த எம்.எல்.ஏ.,விடம், வாக்குவாதம் செய்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுாரில் இருந்து பாவூர்சத்திரம் மெயின் ரோடு வரை, புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு, நேற்று பூமி பூஜை நடைபெற்றது. பணியை தென்காசி காங்., - எம்.எல்.ஏ., பழனி நாடார் துவக்கி வைத்தார்.

எம்.எல்.ஏ., பழனி நாடாரிடம், அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், 'நான்கு ஆண்டுகளுக்கு பின் இப்போது தான் இங்கு வந்துள்ளீர்கள். ஓட்டு கேட்கும் போது வந்தது; அதன் பின் கல்யாணம், சடங்குன்னு விழாக்களுக்கு மட்டும் வருகிறீர்கள்; மக்கள் குறைகளை கேட்க வரவில்லை' எனக்கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பழனி நாடார் அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்தவர்கள் சுதாரித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். கேள்வி கேட்ட நபரை, எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement