கள்ளச்சாராய பாதிப்பு வழக்கு சி.பி.ஐ., விசாரணை தீவிரம் 

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில், கடந்தாண்டு ஜூன், 18 மற்றும் 19ல் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில், 230 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 69 பேர் இறந்தனர். 161 பேர் பாதிக்கப்பட்டனர்.

விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள், மெத்தனால் சப்ளை செய்தவர்கள் என, 24 பேரை கைது செய்தனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை அமைத்து, விஷ சாராயம் குடித்து பாதித்தவர்கள், அவர்களதுகுடும்பத்தினர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காவல் துறை,வருவாய் துறையினரிடம் விசாரணை நடந்தது.

இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து கடந்தாண்டு, நவ., 20ல் இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார், வழக்கு சம்மந்தமான அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் கடந்த ஜன., மாதம் கள்ளக்குறிச்சி பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இடங்களை பார்வையிட்டு, சி.பி.ஐ., போலீசார் விசாரணையை துவக்கினர். பின், அப்பகுதி மக்களிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனி அறையில், சில தினங்களாக, சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர், பாதித்தவர்கள், மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரை தனித்தனியாக வரவழைத்து, பல்வேறு கேள்விகள் எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement