வீடு தேடி விண்ணப்பம் வழங்க ஏற்பாடு 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

தேனி:மாவட்டத்தில் ஜூலை 15 முதல் செப்டம்பர் இறுதிவரை 218 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கிறது.

இந்த முகாமிற்கு முன் வீடுகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கி பூர்த்தி செய்து பெற ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மாநில அரசு சார்பில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஊராட்சி,பேரூராட்சி, நகராட்சிகளில் பொதுமக்கள் குறைகள் களைய 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் ஊராட்சிகளில் 10 ஆயிரம் பொதுமக்களுக்கு ஒரு முகாம், பேரூராட்சிகளில் இரு முகாம், நகராட்சிகளில் 5 வார்டுகளுக்கு இரு முகாம்கள் வீதம் நடத்தப்பட உள்ளது.

இதே போன்று மக்களுடன் முதல்வர் என்ற முகாம் இரு ஆண்டுகளுக்கு முன்நடத்தப்பட்டது குறிப்பிட தக்கது.

அதிகாரிகள் கூறுகையில், 'தேனி மாவட்டத்தில் ஊரக பகுதி, நகராட்சி, பேரூராட்சி என 218 இடங்களில் ஜூலை 15 முதல் செப்டம்பர் இறுதி வரை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முகாமில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் இடம் பெறும்.

முகாம் நடக்கும் சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை வீடுகளில் வினியோகம் செய்வார்கள்.

அதில் பொதுமக்கள் தங்கள் விவரங்கள், குறைகள், அது தொடர்பான துறைகள் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் முகாமில் வழங்கி பயனடையலாம். முகாம் நடைபெறும் நாளில் மனுக்கள் எழுதி வழங்குவதை தவிர்க்கவும், பிரச்னைகளை தெளிவாக எடுத்துரைக்கவும் முன்கூட்டியே விண்ணப்பம் வழங்கும் திட்டம் உதவும்,' என்றனர்.

Advertisement