சீர்காழி சட்டை நாதர் கோவிலில் அமைச்சர் நேரு பய பக்தியுடன் சுவாமி தரிசனம்

மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சுக்கிர வார தினமான இன்று திமுக அமைச்சர் கே.என்.நேரு பயபக்தியுடன் தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு சட்டைநாதர் சுவாமிக்கு நடைபெறும் சுக்கிர வாரம் பூஜை சிறப்பு. எங்கும் இல்லாத படி சட்டை நாதருக்கு புனுகு சாத்தி, வடமாலை அணிவித்து நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் சட்ட பிரச்னைகள் மற்றும் சாப, பாவ, தோஷங்கள் நீங்கி சகல நன்மைகளையும் அடைவார்கள் என்பது ஐதீகம்.
இன்று மாலை தி.மு.க., அமைச்சர் நேரு கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், திருநிலை நாயகி அம்பாள் மற்றும் சட்டை நாதர், அஷ்ட பைரவர் சன்னதிகளில் வழிபாடு நடத்தினார். அப்போது அவர் சட்டையை கழட்டி விட்டு பயபக்தியுடன் தரிசனம் செய்தார். சிவாச்சாரியார் பிரசாதங்களை வழங்கினார்.