நாகத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

திருத்தணி:திருத்தணி அருகே இரண்டு கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி நாயுடு மோட்டூர் கிராமத்தில் உள்ள நாகத்தம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது.

கோவில் வளாகத்தில், 5 யாக சாலைகள், 108 கலசங்கள் வைத்து, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவகிரக பூஜை, தன பூஜை மற்றும் இரண்டு கால யாக சாலை பூஜைகள் நடந்தன.

நேற்று காலை, 7:00 மணிக்கு மூன்றாம் மற்றும் நான்காம் கால யாக சாலை பூஜை நடந்தது.

காலை, 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கோபுரம் மற்றும் அம்மனுக்கு கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதே போல் திருத்தணி அடுத்த அகூர் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் மற்றும் காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 25ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் நவகிரக பூஜைகளுடன் துவங்கியது.

நேற்று காலை 9:00 மணிக்கு சித்தி விநாயகர், காலை 9:30 மணிக்கு காளியம்மன் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement