இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது

மயிலாடுதுறை: நீடூரில் இளைஞர் பட்டாக்கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


மயிலாடுதுறை அருகே நீடூர் மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஹாலிக்(36). சமையல்காரரான இவரை கடந்த 24-ம் தேதி டூவீலரில் வந்த இருவர் பட்டா கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பினர்.பலத்த காயமடைந்த முகமது ஹாலிக்,மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். குற்றவாளிகள் கடலூர் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அங்கு சென்ற போலீஸார் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த
மயிலாடுதுறை செம்பனார்கோவிலை அடுத்த மேமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டா கத்தியால் வெட்டிய செல்வம் மகன் சரண்ராஜ்(28),
டூவிலரை ஓட்டி வந்த ஆறுபாதி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் விஜய் என்கிற குண்டுவிஜய்(28),
இவர்களுக்கு உதவிய தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த வரதராஜன் மகன் வடிவேலன் (எ)விஜயகாந்த் (20) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement