திண்டுக்கல்லில் டி.என்.பி.எல்., கிரிக்கெட் திருவிழா

திண்டுக்கல்: தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில், டி.என்.பி.எல்., ('டி-20') 9வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. கோவை, சேலம், நெல்லையில் நடந்த லீக் போட்டிகளின் முடிவில் சேப்பாக்கம் (12 புள்ளி), திருப்பூர் (8), திண்டுக்கல் (8) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள ஒரு இடத்துக்கு சேலம் (6 புள்ளி), திருச்சி (4), நெல்லை (4), மதுரை (4) அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. கோவை அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
கடைசி கட்ட லீக் சுற்று, 'பிளே-ஆப்' போட்டிகள் இன்று முதல் திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடக்கவுள்ளன. இன்று நடக்கும் லீக் போட்டியில் சேப்பாக்கம் - மதுரை, கோவை - சேலம் அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில் திருப்பூர் - நெல்லை, திண்டுக்கல் - திருச்சி அணிகள் விளையாடுகின்றன.
புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று-1, ஜூலை 1ல் நடக்கிறது. மூன்றாவது, 4வது இடம் பிடிக்கும் அணிகள் மோதும் 'எலிமினேட்டர்' போட்டி, ஜூலை 2ல் நடக்கவுள்ளது. ஜூலை 4ல், தகுதிச் சுற்று-2 நடத்தப்படுகிறது. பைனல், ஜூலை 6ல் நடக்கவுள்ளது.