முதல்வர் விழாவில் விஜய் படம்; மாணவர்களால் திடீர் சர்ச்சை



சென்னை : முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவில், நடிகர் விஜய் கட்சியின் கொடி நிறத்தில், விஜய் உருவப்படம் அச்சிட்ட கைக்குட்டையை, கல்லுாரி மாணவர்கள் காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாகித்ய அகாடமி மற்றும் ஜே.என்.யு., பல்கலையின் சிறப்பு நிலை தமிழ்த் துறை சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு விழா கருத்தரங்கு, கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. சென்னையில் உள்ள பல்வேறு கல்லுாரி மாணவ - மாணவியர், கருத்தரங்கிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். காலை 10:30 மணிக்கு கருத்தரங்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 8:00 மணிக்கே மாணவர்கள் அரங்கில் அமர வைக்கப்பட்டனர்.



நிகழ்ச்சியை வீடியோ எடுத்தனர். அப்போது, மேடை முன் அமர்ந்திருந்த மாணவர்களில் இருவர் எழுந்து, நடிகர் விஜய் உருவப்படம் அச்சிடப்பட்ட, அவரது கட்சிக் கொடி நிறத்திலான கைக்குட்டையை காண்பித்தனர். அவர்கள் பின்புறம் அமர்ந்திருந்த மாணவர் ஒருவர், சிறிய அளவிலான விஜய் படத்தை காண்பித்தார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.



அதை பார்த்த நுண்ணறிவுப் பிரிவு ஏட்டு சண்முகம், மாணவர்களிடம் இருந்த கைக் குட்டையை பெற்று, திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, அந்த மாணவர்களை, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், அவர்கள் புதுக்கல்லுாரியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.


மூவரில் ஒருவர் விஜய் கட்சியான த.வெ.க.,வில் இளைஞர் அணி உறுப்பினராக இருப்பதும் தெரிந்தது. மூன்று பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.


போலீசார் விசாரணையின் போது, 'முதல்வர் நிகழ்ச்சியில் விஜய் படத்தை எப்படி காண்பிக்கலாம்?' என, திரும்ப திரும்ப கேட்டதாக மாணவர்கள் தரப்பில் கூறினர்.

Advertisement