மின் கணக்கீட்டு அட்டைக்கு 'குட்பை'; கட்டண விபரம் இனி செயலியில் வரும்

சென்னை : மத்திய அரசின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், வீடு உட்பட அனைத்து நுகர்வோர்களுக்கும், மின் பயன்பாடு மற்றும் மின் கட்டண விபரங்களை அட்டையில் எழுதி தருவதற்கு பதிலாக, மொபைல் போன் செயலி மற்றும் இணையதளம் வாயிலாக தெரிவிக்கும் வசதியை, மின் வாரியம் துவக்க உள்ளது.
தமிழகத்தில், 3.44 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இதில், தொழிற்சாலைகளை உள்ளடக்கிய உயரழுத்த பிரிவில், 11,500 மின் இணைப்புகள் உள்ளன. அவற்றுக்கான மின் பயன்பாடு மாதந்தோறும், ஆளில்லாமல் தானாகவே கணக்கு எடுக்கப்பட்டு, கட்டண விபரம் மின்னஞ்சலில் அனுப்பப்படுகிறது.
வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு நுகர்வோருக்கு, மின் ஊழியர்கள் நேரில் சென்று, மின் பயன்பாட்டை கணக்கு எடுத்து, அதன் விபரத்தை மின் கணக்கீட்டு அட்டையில் எழுதி தருகின்றனர். இதை சரிவர செய்யாததால், மின் கட்டணங்களை நுகர்வோரால் தெரிந்துகொள்ள முடியவில்லை.
மத்திய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த நுகர்வோருக்கும், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் பணி துவங்கி உள்ளது.
இத்திட்டத்தால், ஆளில்லாமல் தானியங்கி முறையில் மாதாந்திர மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படும். இதற்கிடையே, மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த இணைப்புகளுக்கு ஒருங்கிணைந்த, 'பில்லிங்' முறையை செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு, மின் கட்டண விபரம் எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்படுகிறது.
தற்போது, ஒருங்கிணைந்த பில்லிங் முறையை அமல்படுத்துமாறு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. பிற மாநிலங்களில் இந்த முறை எப்படி உள்ளது என்பது குறித்து ஆலோசனை கேட்கப்பட்டு, அதற்கேற்ப இங்கும் செயல்படுத்தப்படும்.
புதிய முறையின் கீழ், மின் கணக்கீட்டு அட்டையில், மின் பயன்பாட்டு விபரம் எழுதி தரப்படாது. மின் பயன்பாடு கணக்கெடுப்பு முடிந்ததும், அந்த விபரம் மொபைல் போன் செயலி, இணையதளம் வாயிலாக தெரிவிக்கப்படும். இதற்காக, புதிய மொபைல் போன் செயலி உருவாக்க வேண்டும்.
ஏற்கனவே, மின் வாரியத்துக்கு மொபைல் போன் செயலி இருப்பதால், அந்த செயலியில் நுகர்வோர், இந்த வசதியை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்படும். வரும் அக்டோபருக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.





மேலும்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
சிங்காநல்லுாரில் கட்டட கழிவை கொட்ட வேறிடம்; மாநகராட்சி முடிவு
-
'தி.மு.க.,ஆட்சி முடியும் முன் வாக்குறுதி நிறைவேற்றணும்'
-
'செவி வழி செய்திகளை அரசியல் தலைவர்கள் பேசாதீங்க... ப்ளீஸ்!'