அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: அவமதிப்பு கூடாது என ஈரான் நிபந்தனை

1


டெஹ்ரான்: ''அயதுல்லா அலி கமேனியை அவமதிக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்,'' என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இரு வாரங்களாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டினால் முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்கு வந்தாலும், ஈரானின் அணுசக்தி நிலைகள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல்களால் ஈரான் உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகிறது. இதன் வெளிப்பாடாக, அண்மையில் பேசிய ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, ''அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை உணர்ந்ததால் தான் அமெரிக்க இந்த போரில் தலையிட்டது,'' என கூறியிருந்தார்.


இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலடி கொடுத்தார். "ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன். அவர் நன்றியில்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீச உத்தரவிடுவேன்," எச்சரிக்கை விடுத்திருந்தார்.


டிரம்ப்பின் இந்தப் பேச்சை தொடர்ந்து சில மணிநேரத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்சி எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "ஈரானின் ஏவுகணை தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் இஸ்ரேல், அமெரிக்காவிடம் தஞ்சம் புகுவதை தவிர வேறு வழியில்லாமல் போய் விட்டது என்பதை சக்திவாய்ந்த ஈரான் மக்கள் உலகிற்கு காட்டியுள்ளோம். அச்சுறுத்தல் மற்றும் அவமதிப்புகளை சகித்துக் கொள்ள மாட்டோம். ஈரான் தன் மதிப்பை அறிந்து, சுதந்திரத்தை மதிக்கிறது. எங்கள் விதியை யாரும் தீர்மானிக்க அனுமதிக்க மாட்டோம்.


அமெரிக்க அதிபர் ஒப்பந்தம் செய்வதிலேயே தீவிரமாக இருக்கிறார். அயதுல்லா அலி கமேனியை அவமதிக்கும் விதமான பேச்சுக்களை தவிர்த்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம். எங்களின் உண்மையான பலத்தை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்க மாட்டோம்," எனக் கூறினார்.

இதன்மூலம், அமெரிக்க அதிபருக்கு ஈரான் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement