காட்டுப்பன்றிகளை பிடிக்க தனி கூண்டு; மாவட்ட வன அலுவலர் தகவல்

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

மெடிக்கல் பரமசிவம்: பொள்ளாச்சியில் 4 வது மண்டல பாசனகால்வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க வேண்டிய சூழலில், வடசித்துார், செங்குட்டுபாளையம், கஞ்சம்பட்டி, காட்டம்பட்டியிலுள்ள நான்கு கால்வாய்களும் துார்வாரி சுத்தப்படுத்த வேண்டும். அப்போது தான் தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் சரியாக போய்சேரும்.

கலெக்டர்: 1 கோடியே 24 லட்சம் ரூபாயில், 206 கி.மீ.,க்கு, கால்வாய் துார்வாரும் பணிக்கு அரசிடம் அனுமதி கேட்டு, திட்ட அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ரங்கசாமி: காற்றுக்கு சாய்ந்து போன வாழை மரங்களுக்கு இழப்பீடாக கேரளாவில் மரம் ஒன்றுக்கு, 110 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 6.70 காசு கொடுக்கின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாது.

காளிச்சாமி: விவசாயிகள் பெரும் பயிர் கடனுக்கு, சிபில் ஸ்கோர் பார்க்கும் நடைமுறையை கைவிட வேண்டும்.

பட்டா மாறுதல், நிலஅளவை, விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனுக்களை சமர்ப்பித்தனர்.

'காட்டுப்பன்றிகளை சுட டபுள் பேரல் துப்பாக்கி'

விவசாயி செந்தில்குமார் பேசுகையில், ''காட்டுப்பன்றிகளை சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் தற்போதைய நிலை என்ன?''பதிலளித்த மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், ''காட்டுப்பன்றிகளை பிடிக்க, பெ.நா.பாளையத்தில் மூன்று கூண்டுகள் வைக்கப்பட்டு பன்றிகள் பிடித்து, வனத்திற்குள் விடப்பட்டன. மேலும் பல பகுதிகளில் கூண்டு வைத்து பிடிக்க, கூண்டுகள் தயாராகி வருகின்றன. காட்டுப்பன்றி குறித்து கணக்கெடுத்து அதற்கேற்ப கூண்டுகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. காட்டு பன்றிகளை சுட டபுள்பேரல், கம்பேக்சின் உள்ளிட்ட துப்பாக்கிகள் உள்ளன,'' என்றார்.

Advertisement