'செவி வழி செய்திகளை அரசியல் தலைவர்கள் பேசாதீங்க... ப்ளீஸ்!'

கோவை; தமிழக பால்வளத்துறை சார்பில், 'மிஷன் ஒயிட் வேவ்' எனும் பயிற்சி முகாம் துவக்க நிகழ்ச்சி, கோவையில் நேற்று நடந்தது. அதை துவக்கி வைத்த அமைச்சர் மனோ தங்கராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

பால் வளத்துறை சார்பில், பால் உற்பத்தியாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது; பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை, லாபத்தில் செயல்பட வைப்பது என இரு செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

'மிஷன் ஒயிட் வேவ்' என்பது புதுமையான சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம்; மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். பால் உற்பத்தி பெருகும்.

ஆவின் விற்பனை, தற்போது உள்ளதை போல் ஒரு மடங்கு அதிகரிக்கும். கிராமப்புறத்தில் ஆவின் பால் விற்பனை மற்றும் சேவையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரசியல் தலைவர்கள் செவி வழியாக, செய்தியை கேட்டு குறை கூறக் கூடாது. விமர்சனம் செய்வோர் நேர்மையான மனதோடு செய்ய வேண்டும். நல்லதையும் கூற வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில், குமரகுரு கல்வி நிறுவன உதவி தலைவர் சரவணன், 'அரைஸ்' அமைப்பு இயக்குனர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாணவர்களுக்கு பயிற்சி

''மாநிலம் முழுவதும், 9,232 சங்கங்கள் செயல்படுகின்றன. நான்காண்டுகளில், 1,351 சங்கங்கள் புதிதாக துவக்கப்பட்டன. 483 சங்கங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. கலைக்கப்பட்ட, 650 சங்கங்கள் மீட்டெடுக்கப்பட்டன. இதன் மூலம், 2,484 சங்கங்கள் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இன்னும், 1,365 சங்கங்கள் செயல்படாதவையாக உள்ளன. இன்னும் சில சங்கங்கள் லாபம் ஈட்ட முடியாமல் உள்ளன. சங்கங்களை லாபத்துடன் செயல்பட வைக்க மாற்று வழியில், மாணவர்களுக்கு பயிற்சி அளித்து மூன்றடுக்கு கூட்டுறவு சங்கங்கள் குறித்து அறிய வைக்க உள்ளோம். ரத்தினம், குமரகுரு கல்லுாரிகளில் இருந்து எம்.பி.ஏ., இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி கொடுத்து, கள ஆய்வுக்கு அனுப்பப்படுவர்,'' என்றார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

Advertisement