சிங்காநல்லுாரில் கட்டட கழிவை  கொட்ட வேறிடம்; மாநகராட்சி முடிவு

கோவை; கோவை மாநகராட்சியில் நேற்று மாமன்ற கூட்டம் நடந்தது. 'ஆல்-பாஸ்' முறையில், ஒன்று முதல், 93 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், நகர் பகுதியில் உருவாகும் கட்டட கழிவுகளை கொட்டுவதற்கு தேர்வு செய்துள்ள நான்கு இடங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான தீர்மானம் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது.

அதில், சிங்காநல்லுாரில் உழவர் சந்தைக்கு பின்புறமுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், 960 குடியிருப்புகள் உள்ளன.

அக்குடியிருப்பை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும். அங்கு கட்டட கழிவுகளை கொட்டக்கூடாதென, குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர். அத்தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாதென, சிங்காநல்லுார் எம்.எல்.ஏ., ஜெயராமன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கடிதம் கொடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக, அ.தி.மு.க., கவுன்சிலர் பிரபாகரன், மன்றத்தில் வலியுறுத்தினார். தி.மு.க., கவுன்சிலர்களும் இதே கருத்தை கூறியதும், அவ்விடத்துக்கு பதிலாக வேறு இடம் தேர்வு செய்யப்படும் என, மேயர் ரங்கநாயகி அறிவித்தார். இத்திருத்தம் மட்டும் மேற்கொள்ளப்படும். 93 தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement