பக்தரின் நகை மாயமான விவகாரம்: போலீசார் விசாரணையின்போது கோயில் ஊழியர் உயிரிழப்பு

4

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பக்தரின் காரில் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணையின் போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்தார்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி 73, என்பவர் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார். சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோயில் தற்காலிக ஊழியர் அஜித் 29, வீல்சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது கார் சாவியை அஜித்திடம் கொடுத்த பெண்கள் காரை பார்க் செய்யுமாறு கூறியுள்ளனர். அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாததால் அருகில் இருந்தவருடன் காரை பார்க் செய்து சாவியை கொடுத்துள்ளார். சாமி தரிசனம் முடிந்து காரில் கிளம்பும் போது காரின் பின் சீட்டில் கட்டைப்பையின் அடியில் வைத்திருந்த பத்து பவுன் தங்கநகை மாயமாகியுள்ளது.

சிவகாமி அஜித்திடம் விசாரித்த போது உரிய பதில் இல்லை. இதனையடுத்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அஜித் உள்ளிட்ட சிலரிடம் இன்று கோயில் அருகே வைத்து விசாரணை செய்துள்ளனர். அஜித்திடம் விசாரணை செய்த போது மயங்கி விழுந்துள்ளார். திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து அஜித்தின் உடல் சிவகங்கை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement