நீரஜ் சோப்ரா மீண்டும் 'நம்பர்-1': ஈட்டி எறிதல் உலக தரவரிசையில்

புதுடில்லி: ஈட்டி எறிதல் தரவரிசையில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார்.
ஈட்டி எறிதல் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை, உலக தடகள கூட்டமைப்பு வெளியிட்டது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறினார். ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரண்டு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா 27, கடந்த 2024, செப்டம்பரில் வெளியான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பறிகொடுத்தார்.
நடப்பு ஆண்டில் தென் ஆப்ரிக்காவில் நடந்த போட்டியில் (84.52 மீ.,) தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தோகா டைமண்ட் லீக் போட்டியில் முதன்முறையாக 90 மீ.,க்கு மேல் (90.23 மீ.,) எறிந்தார். பாரிஸ் டைமண்ட் லீக் போட்டியில் (88.16 மீ.,) முதலிடம் பிடித்த இவர், சமீபத்தில் செக்குடியரசில் நடந்த 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளத்தில் முதலிடத்தை (85.29 மீ.,) தட்டிச் சென்றார். இதனையடுத்து உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றினார்.
கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்சன் (1431 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (1407) 3வது இடத்தில் நீடிக்கிறார்.