மூடி இல்லாத 'மேன்ஹோல்' வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் உள்ள நெடுஞ்சாலையோர வடிகால்வாயில், 'மேன்ஹோல்' இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலை 32 கி.மீ., துாரமுடையது. இந்த சாலையில் தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இருவழிச் சாலையாக இருந்த இச்சாலையில் போதிய இட வசதி இல்லாமல் இருந்தது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
எனவே, இச்சாலையை நான்குவழிச் சாலையாக மாற்ற, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, 2023ல் புக்கத்துறை முதல், நடராஜபுரம் மற்றும் உத்திரமேரூர் முதல், மீனாட்சி கல்லுாரி வரை, மொத்தம் 7.2 கி.மீ., துாரம் 54.3 கோடி ரூபாய் செலவில், நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
அப்போது, சாலையின் இருபுறமும் வடிகால்வாய் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தற்போது, உத்திரமேரூர் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில், அமைக்கப்பட்டுள்ள வடிகால்வாயில் உள்ள, 'மேன்ஹோல்' ஒன்று திறந்த நிலையில் உள்ளது.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத் தடுமாறி, திறந்தநிலை மேன்ஹாலில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, நெடுஞ்சாலையோரத்தில் திறந்த நிலையில் உள்ள வடிகால்வாயில், 'மேன்ஹோல்' மீது சிலாப் அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வாகன, ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.