பத்ரா நீரை கொண்டு செல்ல எதிர்ப்பு பா.ஜ., அழைத்த தாவணகெரே 'பந்த்' தோல்வி

தாவணகெரே: பத்ரா கால்வாய் தண்ணீரை தாவணகெரேயில் இருந்து சிக்கமகளூரு, சித்ரதுர்காவில் உள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்ல எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ., விடுத்திருந்த முழு அடைப்பு தோல்வி அடைந்தது.

தாவணகெரே ரூரல் படா கிராஸ் பகுதியில், பத்ரா கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் வலதுகரை வழியாக செல்லும் தண்ணீரை சிக்கமகளூரு, சித்ரதுர்கா மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தாவணகெரே டவுனில் முழு அடைப்பு போராட்டத்துக்கு, பா.ஜ., அழைப்பு விடுத்தது.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை. கடைகள், ஹோட்டல்கள் வழக்கம் போல திறந்திருந்தன. பஸ், ஆட்டோக்கள் ஓடின. திறந்த ஜீப்பில் பா.ஜ., தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்ற ரேணுகாச்சார்யா, 'முழு அடைப்புக்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்' என மைக்கில் பேசியபடி சென்றார். ஆனால் யாரும் கேட்கவில்லை. முழு அடைப்பு தோல்வி அடைந்தது.

தாவணகெரே வித்யாநகர் சதுக்கத்தில், மாவட்ட பா.ஜ., தலைவர் லோகிகெரே நாகராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது டயர்களை சாலையில் போட்டு தீவைத்தனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தீயை அணைத்தனர்.

'தாவணகெரேயில் இருந்து சிக்கமகளூரு, சித்ரதுர்காவுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணிக்கு, பா.ஜ., ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது. இப்போது அக்கட்சியின் தேவையில்லாத அரசியல் நாடகம் ஆடுகின்றனர்' என, தாவணகெரே மாவட்ட காங்கிரசார் குற்றஞ்சாட்டினர்.

தாவணகெரே டவுனில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸ் தொண்டர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நிலைமையை கட்டுப்படுத்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்து, வேன்களில் ஏற்றினர். சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement