வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தயார்: அமெரிக்காவின் உதவியை நாடுகிறார் அதிபர் ஜெலென்ஸ்கி!

கீவ்: உக்ரைனில் ரஷ்யாவின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, "அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தயாராக இருக்கிறோம்" என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.



இது குறித்து ஜெலன்ஸ்கி கூறியதாவது: இரவு முழுவதும், உக்ரைன் முழுவதும் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு குடியிருப்பு கட்டடமும் தாக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, தாக்குதலை முறியடிக்கும் போது, ​​எங்கள் எப்-16 போர் விமானத்தின் விமானி மக்ஸிம் உஸ்டிமென்கோ இறந்தார். இன்று, அவர் 7 வான்வழி இலக்குகளை அழித்தார். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.


அவரது மரணத்தின் அனைத்து சூழ்நிலைகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன். உக்ரைன் விமானப் போக்குவரத்து துறை நமது வான்வெளியை வீரத்துடன் பாதுகாக்கிறது. உக்ரைனைப் பாதுகாக்கும் அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.


தாக்குதல்களை நடத்தும் திறன் இருக்கும் வரை மாஸ்கோ நிறுத்தாது. இந்த வாரம் மட்டும், 114 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 1,270 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 1,100 கிளைடு குண்டுகள் வீசப்பட்டன. அமைதிக்கான அழைப்புகளை மீறி, தொடர்ந்து போரை நடத்துவதாக புடின் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.


ஆக்கிரமிப்பாளர் மீதான அழுத்தம் தேவை. ஏவுகணைகள், ட்ரோன்கள் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க வான் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்க தயாராக இருக்கிறோம். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் எங்கள் அனைத்து கூட்டாளிகளின் ஆதரவை நாங்கள் நம்புகிறோம். உதவி செய்யும் அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

Advertisement