காவிரி கரையோரம் வீடு, வீடாக சென்று வெள்ள எச்சரிக்கை விடுத்த தாசில்தார்

ஈரோடு: கருங்கல்பாளையம் காவிரி கரையில் வீடுகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு வீடு, வீடாக சென்று, ஈரோடு தாசில்தார் அறிவுறுத்தினார்.


மேட்டூர் அணை முழு கொள்ளளவையும் எட்டிய நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக காவிரி ஆற்றில் நேற்று மாலை திறக்கப்பட்டது. முன்னதாக நேற்று காலை முதலே காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள், வெள்ளம் சூழ்ந்து விடாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன், கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு கரையோரம் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். காவிரி ஆற்றில் செல்லும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
ஆற்றில் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். எனவே அனைத்து தரப்பினரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குளித்தல், துவைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட கூடாது. சோழீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளிக்க, கைகால்களை கழுவ ஆற்றில் இறங்க அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தினார். அவருடன் வருவாய் துறையினர் சென்றனர். மாநகராட்சி சார்பிலும் மாநகராட்சி குப்பை சேகரிக்கும் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
சோழீஸ்வரர் கோவில் முன் படித்துறை வழியே, காவிரி ஆற்றில் பக்தர்கள் இறங்குவதை தவிர்க்க பேரிகார்டுகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement