எட்டு கண் மதகில் 3,500 கன அடி நீர் திறப்பு படித்துறையில் குளிக்க வந்த மக்கள் ஏமாற்றம்

மேட்டூர்: எட்டு கண் மதகில் பாசனத்துக்கு, 3,500 கனஅடி நீர் திறக்கப்பட்டதால், வெளியூர்களில் இருந்து காவிரியில் நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு அணை, சுரங்க மின் நிலையங்கள் வழியாக, 22,500 கனஅடி, 8 கண் மதகு வழியாக, 3,500 கனஅடி என மொத்தம், 26,000 கனஅடி நீர் காவிரியில் நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டது.இதில், எட்டு கண் மதகு வழியாக திறக்கப்பட்ட, 3,500 கனஅடி நீர் பூங்கா அருகிலுள்ள கால்வாய் வழியாக பெருக்கெடுத்து சென்று காவிரியாற்றில் கலந்தது. வழக்கமாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் முனியப்பன் கோவில் அருகிலுள்ள படித்துறைக்கு சென்று கால்வாய் நீரில் நீராடுவது வழக்கம்.
விடுமுறை நாளான நேற்று, வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மேட்டூர் வந்தனர். அவர்களில் பலர் மேட்டூர் காவிரி பாலம் முதல், முனியப்பன் கோவில் வரை ஆங்காங்கே அமைந்துள்ள, 4 படித்துறைகளுக்கு குளிக்க சென்றனர். இதில், மூன்று படித்துறை கால்வாயில் இருந்த நிலையில், 8 கண் மதகு வழியாக பாசனத்துக்கு திறந்த, 3,500 கனஅடி நீர் பெருக்கெடுத்து சென்றதால் பெரும்பாலான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கரையில் நின்றவாறு நீராடி சென்றனர். பலர் வெள்ளம் பெருக்கெடுத்து சென்றதால், குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement