புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை காலதாமதத்தால் பயனாளிகள் வேதனை

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை தாமதத்தால் பயனாளிகள் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர்.

ராஜபாளையத்தில் உயர் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் விருது நகருக்கும், திருநெல்வேலிக்கும் பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. தொடர் கோரிக்கையை அடுத்து மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையாக நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த ரூ.40 கோடி மதிப்பில் மருத்துவமனை வளாகத்தில் 1.8 ஏக்கர் பரப்பளவில் அடிக்கல் நாட்டப்பட்டது.

மொத்தம் 227 படுகை வசதிகளுடன் விபத்து சிகிச்சை பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளோடு 4 மாடியுடன் பல்நோக்கு வளாகம் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு டிச.20-க்குள் கட்டுமான பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதற்கு மாறாக அடிக்கல் நாட்டி இரண்டு ஆண்டுகள் கடந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போதைய நிலையில் பணி முடிந்து பொதுப்பணித்துறை ஒப்படைக்காததால் மின் இணைப்பு பெற முடியவில்லை. 50 சதவீத உபகரணங்கள் வந்துவிட்ட நிலையில் தாமதம் காரணமாக நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

புதிய மருத்துவமனைக்கு தேவையான 10 டாக்டர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்ட 70 அலுவலர்களை உடனடியாக நியமனம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement