திராவிட சித்தாந்த கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி

மதுரை : 'சட்டசபை தேர்தலில் திராவிட சித்தாந்தம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமையும்' என தே.மு.தி.க., இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: சட்டசபை தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஜன.,9ல் அறிவிப்போம் என தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா தெளிவாக கூறியுள்ளார். அதற்கு முன் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வலுவை நிரூபிக்கவுள்ளோம்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில் 2011ல் 29 உறுப்பினர்கள் கோட்டைக்குச் சென்றனர். , வரும் தேர்தலில் பிரேமலதா தலைமையில் பல எம்.எல்.ஏ.,க்கள் கோட்டைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. த.வெ.க., தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிடுவது அவரது பலம். 'கேப்டன் வேறு, விஜய் வேறு'.

தே.மு.தி. க.,வை சங்கடப்படுத்த எந்தக் கட்சியாலும் முடியாது. தி.மு.க., அ.தி.மு.க., வோடு கூட்டணி வைப்பதற்கு எங்களுக்கு எந்தசங்கடமும் கிடையாது. விஜயகாந்த் ஆரம்பித்த கட்சி தோற்கக் கூடாது. யாருடன் கூட்டணி வைத்தால் ஜெயிப்போம் என்பது பற்றி முடிவு எடுத்துள்ளோம்.

முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் விஜயகாந்துக்கு திருமணம் செய்து வைத்தார். அதன் பிறகு அரசியலில் காழ்ப்புணர்ச்சி ஆகிவிட்டது. 2026ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும். திராவிட சித்தாந்தம் கொண்ட கட்சிகள்தான் கூட்டணி ஆட்சியில் இடம்பெறும். தமிழகம் என்பது திராவிட நாடு என்றார்.

Advertisement