முதல்வர் அறிவித்தும் பதவி உயர்வு பெறமுடியாமல் தவிக்கும் எஸ்.ஐ.,க்கள்

மதுரை: 'தமிழகத்தில் எஸ்.ஐ., தலைமையில் இயங்கும் 280 போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் பதவி உருவாக்கப்படும்' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தும் துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் அரசாணையாகாமல் கிடப்பில் கிடக்கின்றன. இதனால் பதவி உயர்வு கனவில் இருக்கும் 280 மூத்த எஸ்.ஐ.,க்கள் பரிதவிப்பில் உள்ளனர்.
தமிழக காவல் துறையில் 2011ல் 1,095 எஸ்.ஐ.,க்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். அதே ஆண்டில் பயிற்சி முடித்து 15 ஆண்டுகளாக எஸ்.ஐ.,க்களாக பலர் பணியாற்றி வருகின்றனர்.
கொரோனாவின் போது ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தியதாலும், காவல் துறையின் நிர்வாக குறைபாடாலும் அவர்கள் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் தமிழக அரசும், காவல் துறை நிர்வாகமும் எஸ்.ஐ., நிலையில் உள்ள 280 போலீஸ் ஸ்டேஷன்களை இன்ஸ்பெக்டர் நிலைக்கு உயர்த்த முடிவு செய்தது.
ஏப். 29ல் சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது, சட்டம் ஒழுங்கை பராமரிக்க, திறம்பட செயல்பட, அவசர நிலைகளை கையாள 280 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, எஸ்.ஐ., தலைமையிலான போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் தலைமையிலானதாக மாற்றப்படும். இதன் மூலம் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யவும், குற்ற வழக்குகளை விசாரிக்கவும், நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும், சட்டம் ஒழுங்கு, ஜாதி, வகுப்புவாத பிரச்னைகளை கட்டுப்படுத்தவும் முடியும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதேநாளில் அறிவித்த கான்ஸ்டபிள்கள் பதவி உயர்வு, மகளிர் போலீசுக்கு திருமண பணம் போன்றவற்றுக்கு அரசாணை வெளியிட்டு, செயல்பாட்டிற்கும் வந்துவிட்டன. ஆனால் 280 இன்ஸ்பெக்டர் பணியிடம் உருவாக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மட்டும் 2 மாதங்களாகியும் அரசாணை வெளியிடப்படாமல் போலீஸ் தலைமையகத்தில் கேட்பாரற்று கிடக்கிறது. பலர் மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
முதல்வரின் அறிவிப்பால் பதவி உயர்வு கனவில் இருந்தவர்கள் மன உளைச்சலில் தவிக்கின்றனர். ''அரசாணை வழங்க உள்துறை செயலகமும், காவல் துறை உயரதிகாரிகளும் தயாராக இருந்த போதும், காவல் துறை தலைமை அலுவலக பணியாளர்களின் மெத்தனத்தால் தாமதம் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் எஸ்.ஐ., தலைமையில் உள்ள இரண்டு ஸ்டேஷன்களுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் இருப்பார். ஆள்பற்றாக்குறை, பணிச்சுமை காரணமாக பலரும் விடுப்பு எடுத்துச் செல்வதால் ஸ்டேஷன்களில் அன்றாட பணிகளை கவனிக்க எஸ்.ஐ.,க்கள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது'' என எஸ்.ஐ.,க்கள் தரப்பில் கூறுகின்றனர்.
சென்னையில் இன்று நடக்கும் சட்டம் ஒழுங்கு கலந்தாய்வு கூட்டத்தில் இதற்கு தீர்வு கிடைக்குமா என 280க்கும் மேற்பட்ட நேரடி எஸ்.ஐ.,க்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


மேலும்
-
'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'
-
பைக்குகள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் உயிரிழப்பு
-
ஓமன் நோக்கி புறப்பட்ட எண்ணெய் கப்பலில் பற்றியது தீ; 14 இந்திய மாலுமிகள் மீட்பு
-
முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்கிறார் இ.பி.எஸ்.,!
-
வெறும் இணைப்பு தான்... பிணைப்பு இல்லை; அ.தி.மு.க., - பா.ஜ., குறித்து திருமா கருத்து
-
ஐதராபாத் கெமிக்கல் ஆலையில் டேங்கர் வெடித்து 10 பேர் பலி; 20 பேர் காயம்