ரூ. 75 ஆயிரம் லஞ்சம்: தனி தாசில்தார் உள்ளிட்ட 3 பேர் கைது

8

திருவள்ளூர்: சாலை விரிவாக்கத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலத்துக்கான இழப்பீட்டு தொகையை வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் மற்றும் அவரது இடைத்தரகர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூருக்கு சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பல இடங்களில் நிலம் கையகபடுத்தப்பட்டு அதற்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் செயல்படும் வேல்யூ ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் கையகபடுத்தப்பட்டது. இதற்கு ரூ.45 லட்சம் இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்யப்பட்டது.


இந்த தொகையை பெற அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், நில எடுப்பு தனி தாசில்தார் எட்வர்ட் விலசனை தொடர்பு கொண்டனர். பல முறை முயற்சித்தும் இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.


ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்தால் இழப்பீட்டு தொகையை தருவதாக தாசில்தார் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி முதற்கட்டமாக ரூ.75 ஆயிரம் லஞ்சம் பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி தாசில்தாரின் இடைத்தரகர்களாக செயல்பட்ட கோமதி விநாயகம் மற்றும் துரை ஆகியோர் மூலம் எட்வர்ட் வில்சனிடம் கொடுக்கப்பட்டது. அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாலா தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்ததுடன், லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement