மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி திட்டமிட்டபடி முடிக்கப்படுமா? வடிவமைப்பின் போது கற்களில் விரிசல் ஏற்படுவதால் சிக்கல்

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணியில், கற்களை வடிவமைக்கும்போது விரிசல் ஏற்படுவதால் திட்டமிட்டபடி பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 2018 பிப்., 2 இரவில், கடை ஒன்றில் ஏற்பட்ட மின்கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் சுவாமி சன்னிதியில் அமைந்து உள்ள வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது. இதைதொடர்ந்து கோவில் கடைகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி நிரந்தரமாக அகற்றப்பட்டன. இம்மண்டபத்தை சீரமைக்க, 2018 முதலே திட்டமிடப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் இரு ஆண்டுகள் தாமதமானது. நீண்ட இழுபறிக்கு பின் கடந்தாண்டு, குவாரியில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, மதுரை கூடல் செங்குளம் பண்ணையில் கல் துாண்கள், பீடம், சிம்ம பீடம், உத்தரம் உள்ளிட்டவற்றுக்காக அழகியல் வேலைப்பாடுகளுடன் கற்களை செதுக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக அரசு, 18.10 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கடந்தாண்டு மார்ச் 27ல், வீரவசந்தராயர் மண்டபத்தில், மூன்று கல் துாண்கள் பொருத்தும் பணி துவங்கியது.

மண்டபம் உத்திரம் போன்றவற்றுக்கு நீளமான, அகலமான ஒரே கல் இருந்தால்தான் கூரை வலுவாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப கற்களை தேர்வு செய்து வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், அப்படி வடிவமைக்கும்போது கற்களில் விரிசல் ஏற்படுகிறது.

இதனால் திட்டமிட்டு எடுத்துவரப்படும் கற்கள் பல, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், திட்டமிட்டபடி பணிகள் ஓராண்டிற்குள் முடிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

கோவில் தரப்பில் கேட்டபோது, 'கும்பாபிஷேகத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன.

'நேற்று முன்தினம் நடந்த அறங்காவலர்கள் குழு கூட்டத்தில், சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

'கற்கள் வடிவமைக்கும் போது விரிசல் ஏற்படுவதும், உடைவதும் சகஜம்தான். அதனால் வடிவமைக்கும் பணி எந்த வகையிலும் பாதிக்காது' என்றனர்.

Advertisement