முதல்வரின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்: இ.பி.எஸ்.,

12

சென்னை: '' முதல்வர் ஸ்டாலினின் -தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்'', என அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்தார்.அவரது குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

இது தொடர்பாக இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஸ்டாலினின் -தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்! கொலை செய்தது உங்கள் அரசு. "SORRY" என்பது தான் உங்கள் பதிலா? அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த முதல்வருக்கு?முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே?

"என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ? வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்?

அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அதிமுக., சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு வழக்குப்பதிவு , கைது எல்லாம் நடக்கிறது.உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழக மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா?

"நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25வது முறை!
இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி! இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


நீதிமன்றம் மூலம் நடவடிக்கை

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: போலீசார் அஜித்தை விசாரனைக்கு அழைத்து சென்று கடினமாக தாக்கியதால் அவர் மரணம் அடைத்தாக தகவல்கள் வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பான செயல்பாட்டை குறித்து நீதிமன்றமும் விமர்சனம் செய்துள்ளது. இச்சம்பவம் கண்டனத்துக்குரியது. போலீசார் ஒருவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால் முறையாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்து அதன் பின் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் அஜித் குமார் சம்பவத்தில் எதுவும் அவர்கள் பின்பற்றவில்லை. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கியதன் காரணமாக தான் காயங்கள் நடந்ததுள்ளதாக தெரிகிறது. எனவே இது ஒரு கொலையாக தான் பார்க்க வேண்டும். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நீதிமன்றத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு 25 'லாக்கப் டெத்', நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு இல்லை. இதன் முழு உண்மை வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement