6 லட்சம் உறுப்பினர் சேர்க்க தி.மு.க., இலக்கு

நாமக்கல், நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 'தி.மு.க., வின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்' சார்பில் கூட்டம் நடந்தது.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:

தி.மு.க., தலைவர், முதல்வர் ஸ்டாலின், 'ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார். இதையொட்டி இன்று (ஜூலை 2), நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், நாமக்கல் பூங்கா சாலை, மேற்கு மாவட்டத்தில், திருச்செங்கோட்டில், ஓரணியில் தமிழ்நாடு இயக்க பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.

நாளை (ஜூலை 3) முதல், நாமக்கல் வருவாய் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும், அமைச்சர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., டிஜிட்டல் ஏஜென்டுகள், பூத் ஏஜென்டுகள், செயல்வீரர்கள் உள்ளிட்டோர் நகரம், கிராமம் வாரியாக வீடு வீடாக சென்று, தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறுவர்.
அப்போது விருப்பமுள்ளவர்களை, 'ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின்' மூலம், தி.மு.க.,வில், உறுப்பினர்களாக இணைக்கும் பணியை அவர்கள் மேற்கொள்வர். தொடர்ந்து ஆக., 11 வரை நடக்கும் இந்த இயக்கத்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., விற்கு, 6 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு கூறினார்.

Advertisement