திருடுபோனது 8 சவரன்: வழக்கு போட்டது 3 சவரன்; கலெக்டரிடம் பெண் புகாரால் பரபரப்பு

கடலுார்; குமராட்சியில் 8 சவரன் நகை திருடு போன நிலையில், போலீசார் 3 சவரன் மட்டுமே திருடு போனதாக வழக்கு போட்டுள்ளதாக கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்தார்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், தெம்மூர் மெயின்ரோட்டை சேர்ந்த சேகர் மனைவி சுந்தரி, 45; அளித்த மனு:

கடந்த மே மாதம் நான் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த எங்கள் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 35; என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி என்னிடமிருந்து 5 சவரன் தாலிச்செயின், 3 சவரன் வளையல் உள்ளிட்ட 8 சவரன் நகையை பறித்துச் சென்றார்.

புகாரின் பேரில், குமராட்சி போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். ஆனால் போலீசார் 3 சவரன் மட்டுமே திருடுபோனதாகவும், அதை மட்டுமே கண்டுபிடித்து தருவோம் என கூறுகின்றனர்.

முறையாக வழக்குப்பதிந்து 8 சவரன் நகையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement