'ஆபர்' பெயரில் விலை குறைப்பால் ஓட்டல் ஓனர்கள் அலறல்

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான, ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்டவை, 'ஆபர்' என்ற பெயரில், உணவு விலையை குறைப்பதால், கட்டுப்படியாகதாக ஓட்டல் உரிமையாளர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.


உணவு டெலிவரி நிறுவனமான, 'ஸ்விக்கி', தங்களது, 'ஆப்'பை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்வதற்கான பிளாட்பார்ம் கட்டணத்தை, கடந்த, 2023 ஏப்.,ல், 2 ரூபாய் உயர்த்தி அறிவித்தது. இதேபோல், 2023 ஆக.,ல் ஜொமாட்டோ நிறுவனமும், இந்த கட்டணத்தை செயல்படுத்த தொடங்கியது. பின், கட்டணம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது ஒரு ஆர்டருக்கு, 20 சதவீதம் அதாவது, 6 ரூபாயாக உயர்ந்துள்ளது.



மேலும், பெரு நகரங்களில், 'பீக் ஹவர்' நேரங்களில், ஒரு ஆர்டருக்கு பிளாட்பார்ம் கட்டணமாக ஜொமாட்டோ, 9 ரூபாயும், ஸ்விக்கி, 10 ரூபாயும் வசூலிக்கிறது. மேலும், டெலிவரி கட்டணம், ஜி.எஸ்.டி., கட்டணம், கையாளுதல் கட்டணம் ஆகியவற்றுடன் சேரும்போது பெருநகரம், சிறு நகரம் என, ஒவ்வொரு நகரத்திற்கும் கட்டணம் மாறுபடுகிறது. இதன் மூலம், இந்த நிறுவனங்களுக்கு கணிசமாக வருவாய் அதிகரித்துள்ளது.


இந்நிலையில், இந்த நிறுவனங்கள் திடீரென ஓட்டல் உரிமையாளர்களுக்கே தெரிவிக்காமல், 'ஆபர்' என்ற பெயரில் விலையை குறைத்து, தங்களது ஆப்களில் விளம்பரப்படுத்தி உணவு வகைகளை விற்பனை செய்து வருகின்றன. சில நேரம், குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவு சப்ளை செய்வதில்லை. அதனால், வாடிக்கையாளர்கள் ஆர்டரை கேன்சல் செய்கின்றனர். அவ்வாறு கேன்சல் செய்யப்படும் ஆர்டர்கள், ஓட்டல் உரிமையாளர்களின் தலையில் கட்டப்படுகிறது. இதுபோன்று, உணவு டெலிவரியில் வெளிப்படை தன்மை இல்லாமல் நடந்து கொள்வதால், ஓட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.


அதன்படி, முதலாவதாக, நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்களுக்கு, நேற்று முன்தினம் முதல் உணவு சப்ளையை நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் வெங்கட சுப்பு கூறியதாவது:



ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்கள், உணவு ஆர்டர் பெறுவதற்கான பிளாட்பார்ம் கட்டணத்தை, 20 சதவீதம் உயர்த்தியுள்ளன. அதுமட்டுமின்றி, இந்நிறுவனங்கள் திடீரென, ஓட்டல் உரிமையாளர்களுக்கே தெரிவிக்காமல், 'ஆபர்' அறிவிக்கின்றன. மேலும், விளம்பர செலவு, டெலிவரி செலவு, ஜி.எஸ்.டி., வரி என பல்வேறு கட்டணங்களை, அந்நிறுவனத்தினர், ஓட்டல் உரிமையாளர்களிடமே பிடித்தம் செய்கின்றனர். இதனால் ஓட்டல் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக, நாமக்கல் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின், ஸ்விக்கி, ஜொமாட்டா நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்வதை நிறுத்தியுள்ளனர். சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், இதுகுறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.



நமது சிறப்பு நிருபர்

Advertisement