19 ஆண்டாக 'கம்பி நீட்டிய' சைபர் குற்றவாளிகள் கைது

சென்னை, சைபர் கிரைம் குற்ற வழக்கில் ஜாமினில் வந்து, 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2003ம் ஆண்டில், சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த, 'எக்ஸ்செல் நெட்வொர்க்' நிறுவனமும், பாரிமுனையில் செயல்பட்டு வந்த 'அக்செஸ்' என்ற நிறுவனமும், 34 தொலைபேசி இணைப்புகளை பெற்றன.

அதற்கான கட்டணத்தை செலுத்தாததால், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, 49 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, மோசடியில் ஈடுபட்ட சையது இப்ராஹிம், முஹம்மது தாஹா யாசீன் ஹமீம் ஆகிய இருவரையும், 2003 மார்ச், 26ல் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த இருவரும் தலைமறைவாகினர்.

தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், 2006ல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இந்நிலையில், 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த, சையது இப்ராஹிம், 55, முஹம்மது தாஹா யாசீன் ஹமீம், 52, ஆகிய இருவரை நேற்று கைது செய்து, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement