தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே: இந்தியா கறார்

தரம்சாலா: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஆன்மிக தலைவரான தலாய் லாமா, அங்கிருந்து வெளியேறி நம் நாட்டில் வாழ்ந்து வருகிறார். வரும் 6ம் தேதி, 90வது பிறந்த நாளை அவர் கொண்டாட உள்ளார்.

இந்நிலையில் தன் மறைவுக்குப் பின்னரும், 600 ஆண்டுகள் பழமையான அறக்கட்டளை தொடரும் என்று நேற்று முன்தினம் அறிவித்தார்.

மேலும், தன் மறுபிறவி என்று சொல்லப்படும் 15வது தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரம், போட்ராங் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளதாகவும் திட்டவட்டமாகக் கூறினார்.

ஆனால், தங்கள் அங்கீகாரம் இல்லாமல் தலாய் லாமாவை தேர்ந்தெடுக்க முடியாது என சீனா கூறியுள்ளது.

தலாய் லாமாவின் பிறந்த நாள் விழாவில், பங்கேற்க மத்திய அரசு சார்பில் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஐக்கிய ஜனதா தள தலைவர் லாலன் சிங் ஆகியோர் ஹிமாச்சலில் உள்ள தரம்சாலா சென்றனர்.

அப்போது பேசிய கிரண் ரிஜிஜு, “திபெத்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுதும் உள்ள அனைத்து ஆதரவாளர்களுக்கும், தலாய் லாமாவின் நிலைப்பாடு மிகவும் முக்கியமானது.

அவரது வாரிசை தீர்மானிக்கும் உரிமை தலாய் லாமாவுக்கே உள்ளது. இதில் வேறு யாரும் தலையிட முடியாது,” என்றார்.

Advertisement