ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!

சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு 'Z பிளஸ் ' பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அவர் வரும் ஜூலை 7ம் தேதி கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 05) இ.பி.எஸ்.,க்கு 'Z பிளஸ் ' பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சேலம் மற்றும் சென்னை உள்ள இ.பி.எஸ்., வீட்டிற்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனையில் புரளி என்பது தெரியவந்தது.
இந்த சூழலில், தற்போது இ.பி.எஸ்.,க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் இ.பி.எஸ்.,க்கு பாதுகாப்பு வழங்குவர்.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆய்வு நடத்தும்.
மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் புதிதாக யாருக்கேனும் பாதுகாப்பு அளிக்க வேண்டுமா என்பது பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுப்பயணம்
இதற்கிடையே, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் இ.பி.எஸ்., கூறியதாவது: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன்; 234 தொகுதிகளுக்கும் செல்கிறேன். எனது சுற்றுப்பயணம் தமிழக மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்; நான் எப்போதும் மக்களுடனே பயணிக்கிறேன்.
பரிதாப நிலை
மக்கள் ஆதரவுடன் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அ.தி.மு.க., வரலாறு படைக்கும். தேர்தலில் அ.தி.மு.க., வென்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிறகு ஸ்டாலின் எங்கள் வீட்டிற்கு வந்தால் வரவேற்போம். வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி உறுப்பினர்களைச் சேர்க்கும் அளவுக்கு ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டது.
விமர்சனம்
ஒவ்வொரு கட்சியும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமானதுதான், அதன்படியே விஜய்யும் விமர்சித்துள்ளார். தி.மு.க., ஆட்சியை அகற்றும் நோக்கத்தோடு உள்ள கட்சிகள் எங்களோடு இணையலாம். தி.மு.க., ஆட்சியை அகற்ற அனைவரும் இணையவேண்டும் என்பதே எனது விருப்பம். கூட்டணி நிலைப்பாடு குறித்து அமித்ஷா ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டார்.
முதல்வர் வேட்பாளர்
பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை வகிக்கும். அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்., எல்லா ஊடகத்திலும், பத்திரிகைகளிலும் வெளியிட்டு உள்ளார்கள். அதையே ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்டு, விறுவிறுப்பான செய்தி வேணும் என்பதற்காக, திருப்பி திருப்பி அதற்கு ஏதாவது ஒரு வடிவத்தை கொடுத்து வெளியிடுவது சரியா? இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.







மேலும்
-
இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் தயார்!
-
பயங்கரவாதிகளை ஒப்படைக்க ஆட்சேபம் இல்லை; பதவி இல்லாத பிலாவல் புட்டோவுக்கு ஞானோதயம்
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு நீதிமன்றம் தடை
-
டில்லியில் ஏ.சி., மெக்கானிக் 3 பேர் மர்ம சாவு
-
வங்கி மோசடி வழக்கில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது
-
கேரளாவில் அமைச்சருக்கு எதிராக வெடித்த போராட்டம்; போலீஸாருடன் தள்ளுமுள்ளு