டில்லி உஷ்ஷ்ஷ்: அமைச்சர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்!; பிரதமர் மோடி

3

புதுடில்லி: சமீபத்தில் டில்லி பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் சந்தித்தார் பிரதமர் மோடி. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும் என்ன செய்கின்றனர் என்பது குறித்து, 'பவர்-பாயின்ட் பிரசன்டேஷன்' வாயிலாக விளக்கினார் டில்லி முதல்வர் ரேகா குப்தா.

இது முடிந்ததும் மோடி, 'மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல், எப்படி அவருடைய தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கிறார்... இதற்காக அவர் என்ன ஏற்பாடுகளை செய்துள்ளார் என்பதை, டில்லி எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமன்றி, அனைத்து எம்.பி.,க்களுமே தெரிந்து கொள்ள வேண்டும்' என அறிவுரை செய்தாராம். பிரதமரின் இந்த பேச்சு, பா.ஜ.,வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனே டில்லி எம்.எல்.ஏ.,க்கள் பாட்டீலைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்துவிட்டனர். அப்படி என்னதான் செய்துவிட்டார் பாட்டீல்?

நான்காவது முறையாக, குஜராத்தின் நவ்சாரி தொகுதி, எம்.பி.,யாக வெற்றி பெற்றவர்; அத்துடன், குஜராத் மாநில பா.ஜ., தலைவர். இவருடைய தொகுதி மற்றும் ஆமதாபாத், டில்லி ஆகிய இடங்களில் இவர் அலுவலகம் வைத்துள்ளார்.

இங்கு பணியாற்றும் நபர்கள், அதிரடியாக வேலை செய்யக் கூடியவர்கள். தொகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக இந்த அலுலவலகங்களில் அளிக்கலாம்; மனு அளித்த ஒரு வாரத்தில் பாட்டீல், மனுதாரரோடு போனில் பேசிவிடுகிறார். அவருடைய பிரச்னையைத் தீர்க்க என்ன செய்யப்பட்டுள்ளது என்பதையும், போனில் விபரமாக சொல்வாராம் பாட்டீல். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹானும், பாட்டீலைத் தொடர்பு கொண்டு, 'பிரதமர், உங்களை புகழ்ந்து தள்ளிவிட்டார்; எங்களுக்கும் உங்கள் ரகசியங்களைச் சொல்லுங்கள்' என, கேட்டாராம். தமிழக எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களும், சி.ஆர்.பாட்டீலின் நடைமுறைகளைப் பின்பற்றினால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம்!

Advertisement