சாலையை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிகரிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் சாலையை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின்கீழ், 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

இந்த தெருக்களின் இருபுறமும் உள்ள வீடுகள், தங்களுக்கான பட்டா இடம் போக, மாநகராட்சிக்கு சொந்தமான சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களையும் சேர்த்து, கட்டுமானங்கள் செய்வது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, செவிலிமேடு பகுதியில், சாலையின் இருபுறமும், சாலையை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. புதியதாக வீடு கட்டுவோர், தங்கள் வீட்டுக்கான படிகட்டுகளையும், வாகன நிறுத்தங்களையும், மாநகராட்சி இடத்தில் கட்டுகின்றனர்.

இதனால், சாலையின் அகலம் குறுகி, டூ - வீலர், கார், ஆம்புலன்ஸ், சவ ஊர்வலம், ரேஷன் பொருள்கள் சப்ளை லாரி என, எந்த முக்கிய வாகனங்களும் செல்ல முடிவதில்லை என, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி முழுதும் இதே நிலை உள்ள சூழலில், செவிலிமேடு பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், சாலை ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை உடனடியாக அகற்றி, வாகனங்கள் செல்ல வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement