78 பந்தில் 143 ரன் விளாசிய வைபவ் * யூத் கிரிக்கெட்டில் சாதனை

வொர்செஸ்டர்: இங்கிலாந்து சென்றுள்ள 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி, 5 போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் 3 போட்டி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. நான்காவது போட்டி வொர்செஸ்டரில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து, பீல்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே (5) ஏமாற்றினார். 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி சிக்சர் மழை பொழிந்தார். இவர் 52 பந்தில் சதம் விளாசினார். 19 வயது கிரிக்கெட்டில் இது புதிய சாதனை. தொடர்ந்து மிரட்டிய வைபவ், 78 பந்தில் 143 ரன் (13 பவுண்டரி, 10 சிக்சர்) எடுத்து, மேயஸ் பந்தில் அவுட்டானார்.
அபிக்யான் 23 ரன் எடுக்க, விஹான் தன் பங்கிற்கு சதம் அடித்தார். இவர் 121 பந்தில் 129 ரன் எடுத்து, ஹோம் பந்தில் அவுட்டானார். இந்திய அணி 50 ஓவரில் 363/9 ரன் குவித்தது.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 45.3 ஓவரில் 308 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா 55 ரன்னில் வெற்றி பெற்றது. தொடரை 3-1 என கைப்பற்றியது.

இளம் வீரர்
யூத் ஒருநாள் அரங்கில் சதம் விளாசிய இளம் வீரர் ஆனார் வைபவ் (14 வயது, 100 நாள்). வங்கதேசத்தின் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவை (14 வயது, 241 நாள், 2013) பின் தள்ளினார்.
* யூத் அரங்கில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் வைபவ் (52 பந்து). இந்திய அளவில் இதற்கு முன் ராஜ் அங்கத் பாவா, 2022ல் 69 பந்தில் சதம் அடித்து இருந்தார்.

10 சிக்சர்
யூத் ஒருநாள் அரங்கில் (19 வயது) ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என வைபவ் (10) சாதனை படைத்தார். முன்னதாக இவர், 9 சிக்சர் (எதிர்-இங்கிலாந்து, 2025) அடித்து இருந்தார்.

Advertisement