நண்பரை சிக்க வைக்க பொய் புகார்: புனே பலாத்கார வழக்கில் திருப்பம்

1

புனே:: மஹாராஷ்டிராவின் புனேவில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், கோபத்தில் தன் நண்பரை போலீசில் சிக்கவைக்க, அவரே நாடகமாடியது தெரியவந்துள்ளது.

மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள கோந்தரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும் இளம்பெண், தன் சகோதரருடன் வசித்து வந்தார்.

கடந்த 2ம் தேதி, 'கூரியர் பாய்' என்ற பெயரில் வீட்டுக்குள் நுழைந்த நபர், மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக போலீசில் அப்பெண் புகார் அளித்தார். 'மொபைல் போனில் செல்பி' எடுத்ததுடன், திரும்பி வருவேன் என மிரட்டல் விடுத்து சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து, சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தன் நெருங்கிய நண்பரை போலீசில் சிக்கவைக்க இதுபோல் அவர் நாடகமாடியது தெரியவந்தது.

இளம்பெண் வீட்டிற்கு வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான், அவர் அந்த பெண்ணின் நண்பர் என தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, ஆரம்பத்தில் பொய் பேசியதை அப்பெண் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

இளம்பெண்ணும், அந்த நபரும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக பழகி வருகின்றனர். குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த நபர், அடிக்கடி வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அப்போது, இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்றும், அந்த நபர் வீட்டிற்கு வந்துள்ளார். இளம்பெண் மறுத்தும், அன்றைய தினம் வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அப்பெண், பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement