வேலுார் மத்திய சிறை மீது இரவில் பறந்த 'ட்ரோன்'


வேலுார், வேலுார் மத்திய சிறையில், 1,500க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தை சுற்றிலும், போலீசாருடன் கண்காணிப்பு கோபுரங்களும், 'சிசிடிவி' கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் சிறை காம்பவுண்டை சுற்றி வெளிப்புறத்திலும், கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சிறை வளாகத்தை ஒட்டி காவலர் குடியிருப்பு சுற்றுச்சுவர் உள்ளது. இப்பகுதியில் ஒரு 'ட்ரோன்' நேற்று முன்தினம் இரவு, 10 நிமிடங்களுக்கு மேல் பறந்துள்ளது.

பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் ட்ரோனை பார்த்து விட்டு, சிறை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

உடனடியாக சிறை காவலர்கள் விரைந்தனர். அதற்குள் 'ட்ரோன்' மறைந்து விட்டது. மத்திய சிறை ஜெயிலர் மகாராஜன் புகார் படி, பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement