14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு

14


சென்னை: 'தமிழகத்தில், 14 அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு நியமிக்கப்பட்ட, 'டீன்'கள் எனப்படும், முதல்வர்கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே' என, தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முதல்வராக பதவி உயர்வு பெறுவோருக்கான பட்டியலை புதிதாக தயாரித்து, நான்கு வாரங்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகளின் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் என, 26 பேராசிரியர்களின் பதவி உயர்வு பட்டியலை அரசு தயாரித்தது. இது சம்பந்தமாக ஆட்சேபனைகளையும் கோரியது. ஆனால், ஆட்சேபனைகள் தெரிவிக்கும் முன்னரே பேராசிரியர்கள் 14 பேருக்கு பதவி உயர்வு வழங்கி, முதல்வர்களாக நியமித்து, 2024 அக்., 3ம் தேதி அரசு உத்தரவிட்டது.



இதை எதிர்த்து, பேராசிரியர் மனோன்மணி, ஜெயலால் உட்பட நான்கு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, 14 அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் நியமனத்தை ரத்து செய்தும், பணிமூப்பு அடிப்படையில் மனுதாரர்களை பதவி உயர்வு பட்டியலில் சேர்த்து, நான்கு வாரங்களில் புதியவர்களை நியமிக்கவும், கடந்த பிப்., 26ல் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை எதிர்த்து, டாக்டர் அமுதாராணி உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.சுரேந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது. டாக்டர்கள் ஜெயலால், கலைவாணி ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


மருத்துவ கல்லுாரி முதல்வர்கள் 14 பேரின் நியமனத்தை, தனி நீதிபதி ரத்து செய்தது சரியே. முதல்வராக பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக ஆட்சேபனைகள் தெரிவிக்க, இரண்டு மாதம் அவகாசம் வழங்கிய நிலையில், அரசு இரண்டு நாட்களில் நியமன உத்தரவு பிறப்பித்துள்ளதை ஏற்க முடியாது.


தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை. மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நான்கு வாரங்களில், அரசு மருத்துவ கல்லுாரிகளின் முதல்வராக, பதவி உயர்வு பெறுவோருக்கான பட்டியலை தயாரித்து, தமிழக அரசு நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement