வங்கி மேலாளரை ஏமாற்றி திருமணம் போலி ஆர்.டி.ஓ.,வை கஸ்டடி எடுக்க முடிவு

நாமக்கல், ஆர்.டி.ஓ., எனக்கூறி, வங்கி உதவி மேலாளரை திருமணம் செய்து கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை, கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


நாமக்கல் மாவட்டம், பெரியமணலி அடுத்த குளத்துக்காட்டை சேர்ந்தவர் நவீன்குமார், 29; இவர், வரகூராம்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், நாமக்கல் ராமாபுரம்புதுாரை சேர்ந்த தன்வர்த்தினி, 29, என்பவருக்கும், 2024 ஜூன், 12ல், வையப்பமலையில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, தன்வர்த்தினி பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றுவதாக அவரது பெற்றோர் கூறினர். ஆனால், திருமணம் முடிந்த சில மாதங்களில், ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக, தன்வர்த்தினி மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரித்ததில், தேர்வாணைய செயலாளர் கையெழுத்திட்ட சான்றிதழ் மற்றும் தன்வர்த்தினி பெயரில், தமிழக அரசின் தலைமை செயலாளர் கையொப்பமிட்ட ஒரு அடையாள அட்டையையும் காண்பித்தனர். தொடர்ந்து, நவீன்குமார் குடும்பத்தினர் இது தொடர்பாக விசாரணை செய்ததில் சான்றிதழ், அடையாள அட்டை என அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.

போலீசார் கடந்த, 26ல், தன்வர்த்தினியை கைது செய்து, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். தன்வர்த்தினி பொள்ளாச்சியில் தங்கி இருந்த வாடகை வீட்டில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், தன்வர்த்தினி, அரசு வேலை வாங்கி தருவதாக நெருக்கமான சிலரை ஏமாற்றி இருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அவரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுக்கக்கோரி, நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தன்வர்த்தினி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை (ஜூலை, 7) விசாரணைக்கு வருகிறது.

Advertisement