துணை முதல்வர் உதயநிதி இன்று வருகை கரூரில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டம்


கரூர், ''கரூருக்கு இன்று வருகை தரும், துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்,'' என, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகளில், துணை முதல்வர் உதயநிதி கலந்துகொள்வதையொட்டி முன்னேற்பாடு பணிகளை, கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: துணை முதல்வர் உதயநிதி இன்று மாலை, 6.45 மணிக்கு குளித்தலைக்கு வருகிறார்.

அங்கு, சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (9ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மதியம், 12:00 மணிக்கு கரூர் பிரேம் மஹாலில், தி.மு.க., இளைஞர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு கரூர் திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து, 18,331 பயனாளிகளுக்கு, 162.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மாலை, 5:30 மணியளவில் கரூர் ராயனுாரில் நான்கு சட்டசபை தொகுதிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், 16,000 பேர் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு, கூறினார்.

Advertisement