திருச்செந்துார் கோயில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு வழிபாடு

3

துாத்துக்குடி : சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கருவறையில் நேற்று வழிபாடு நடத்தினார்.


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் பங்கேற்றார். நேற்று காலை, 4:00 மணிக்கு யாகசாலைக்கு சென்ற அவருக்கு, கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி கருவறை விமானத்திற்கான மாலை, வஸ்திரம், புனித நீரை தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர், அவர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.



சிருங்கேரி சுவாமிகளுக்கு திருச்செந்துார், ராமேஸ்வரம், பழநி கோயில்களில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் உரிமை உண்டு. அதன்படி நேற்று மாலை 6:00 மணிக்கு சுவாமிகள் முருகன் கருவறைக்கு சென்றார்.

அங்கு மிக விரிவாக பூஜையை செய்து, பட்டு வஸ்திரங்கள்,அர்ச்சனை தீபாராதனை சமர்ப்பித்து வழிபட்டார்.



சுவாமிக்கு நைவேத்தியம் செய்ய 2 கிலோ எடை வெள்ளி பாத்திரம் ஒன்றை அதிகாரிகளிடம் சுவாமிகள் வழங்கினார். மடத்திற்கு திரும்பிய சுவாமிகள் சந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்தார்.


திருச்செந்துாரில் 1983ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் சிருங்கேரியின் 36வது பீடாதிபதி ஸ்ரீ
பாரதீ தீர்த்த சுவாமிகள் கலந்துகொண்டார்.



இம்முறை கலந்து கொண்ட இளைய மடாதிபதி ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் இன்று காலை துாத்துக்குடியில் இருந்து விமானத்தில் சிருங்கேரி செல்கிறார்.

Advertisement