அமெரிக்காவுக்கு சீன அரசு பதிலடி

பீஜிங்; கூடுதல் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த நிலையில், 'பிரிக்ஸ் மோதலை விரும்பும் அமைப்பு அல்ல' என, சீனா கூறியுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு, 2009-ல் துவங்கப்பட்டது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரியோ நகரில் நேற்று முன்தினம் துவங்கியது.

இதில், அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல் சர்வதேச வர்த்தக்கத்துக்கு அதிக வரி விதிப்பதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கை மீது கவனம் செலுத்துவோர்க்கு நன்றி' என, குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் நேற்று கூறியதாவது:

பல நாடுகளை உள்ளடக்கிய அமைப்பான பிரிக்ஸ், வளரும் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்புக்கான தளமாக விளங்குகிறது.

எந்தவொரு நாட்டையும் குறிவைத்து மோதலில் ஈடுபடும் நோக்கில் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்படவில்லை. வர்த்தகம் மற்றும் வரி விதிப்பு மோதலில் யாருக்கும் வெற்றி கிடைக்காது.

அதிகளவில் வரி விதிக்கும் போக்கு முன்னேற்றத்துக்கான எந்த வழியையும் வழங்காது. எனவே, அதிகளவு வரிகளை விதிப்பது யாருக்கும் பலனளிக்காது. வரிகளை, மற்றவர்கள் மீது திணிக்கும் கருவியாக பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement