தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் 'வீக்'; 'உடன்பிறப்பே வா' துவங்கிய பின்னணி

சென்னை: தி.மு.க., கூட்டணிக்கு, 100 சட்டசபை தொகுதிகளில் பலம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளதால், 'உடன்பிறப்பே வா' ஆலோசனை கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பலம் குறைவு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. தேர்தலுக்கு குறைந்த காலமே இருப்பதால், ஆட்சியை தக்க வைப்பதற்கான தீவிர முயற்சியில் தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.
கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை சரி செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை பொறுப்பாளர்களாக தி.மு.க., தலைமை நியமித்துஉள்ளது.
தொகுதி நிலவரம், வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை கண்காணிக்க, 'ஐபேக், பென்' உள்ளிட்ட மூன்று நிறுவனங்களை தி.மு.க., தலைமை நியமித்துள்ளது.
இதில், பென் நிறுவனம் வாயிலாக, தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்புகள் குறித்து, சட்டசபை தொகுதி வாரியாக, இரண்டு மாதங்களாக அலசி ஆராயப்பட்டுள்ளது.
இதில், 100 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி பலம் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இத்தகவல், முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
இதையடுத்து, கட்சியின் ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகிகளை, தனித்தனியாக சந்திக்கும் ஆலோசனை கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி உள்ளார்.
தி.மு.க., தலைமை அலுவலகமாக, அறிவாலயத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு, 'உடன்பிறப்பே வா' என பெயரிடப்பட்டு உள்ளது.
வேகம் காட்டவில்லை
இதுவரை 35க்கும் அதிகமான தொகுதிகளின் நிர்வாகிகளை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து, அவர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளில் வேகம் காட்டவில்லை என்றால், தயவு தாட்சண்யமின்றி கட்சி பதவிகளும் பறிக்கப்படும் என அறிவுறுத்தி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
ஜூன் 13 முதல், 'உடன்பிறப்பே வா' என்ற பெயரில் நிர்வாகிகள் சந்திப்பை முதல்வர் நடத்தி வருகிறார்.
இதுவரை சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை, பரமத்தி வேலுார், கவுண்டம்பாளையம், பரமக்குடி, ஸ்ரீரங்கம், குன்னம், ஆர்.கே.நகர், கிருஷ்ணகிரி, அணைக்கட்டு, சங்கராபுரம், ஸ்ரீபெரும்புதுார், மயிலாப்பூர், தி.நகர், அந்தியூர், மொடக்குறிச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை முடிந்து உள்ளது.
இந்த தொகுதிகள் அனைத்திலும், தி.மு.க., கூட்டணியின் செல்வாக்கு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. கட்சியின் ஓட்டு வங்கியை பலப்படுத்த, இங்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அறிவுறுத்தல்
மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்களில், கூடுதல் பயனாளிகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், மண்டல பொறுப்பாளர்களுக்கு தனித்தனியாக அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும்
-
திருவண்டார்கோவில் பகுதியில் ரூ.78 லட்சத்தில் சாலை பணி
-
வயிற்று வலி அவதி மாணவர் தற்கொலை
-
மூதாட்டியிடம் நகை 'அபேஸ்' பெண்ணாடத்தில் துணிகரம்
-
என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர்கள் நியமனம்
-
அரசு துறைகளில் 10 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம்; எதிர்க்கட்சி தலைவர் சிவா பகீர் குற்றச்சாட்டு
-
புறாக்களுக்கு உணவளிக்கும் இடங்களை மூட மஹா., அரசு உத்தரவு