மதுக்கடையில் தீப்பெட்டி தகராறு; கத்தியால் குத்தி ஒருவர் கொலை

5

போத்தனுார்: மலுமிச்சம்பட்டியிலுள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் நேற்று முன்தினம், போடிபாளையம், கே.கே. வீதியை சேர்ந்த ஜெயக்குமார், 28 தனது நண்பர்கள் ஜீவன் பிரசாத், 28, மதன்குமார் 30 ஆகியோருடன், மது குடித்தார்.


அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவர், ஜெயக்குமாரிடம் சிகரெட் பற்ற வைக்க, தீப்பெட்டி கேட்டதாக கூறப்படுகிறது. இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மது குடித்த பின், மதன்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார்.


இதன் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலை ஜெயக்குமார், ஜீவன் பிரசாத்துடன் ஈச்சனரிக்கு முன் பைபாஸ் சாலை சந்திப்பிலுள்ள ஒரு பேக்கரியில் டீ குடிக்க வந்து, பேசிக்கொண்டிருந்தனர்.



அப்போது மது பாரில் தகராறு செய்த இருவரும், காரில் வந்தனர். ஜெயக்குமாருடன் மீண்டும் அந்நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ஜெயக்குமாரின் கழுத்தில் குத்தினார். அவ்விருவரும் காரில் தப்பினர்.


படுகாயமடைந்த ஜெயக்குமாரை அவரது நண்பர் ஆம்புலன்சில் சுந்தராபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார்.


தகவலறிந்த மதுக்கரை போலீசார், சடலத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் காணப்பட்ட குற்றவாளிகள் தப்பிய காரின் பதிவெண்ணை, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் தெரிவித்தனர். மாவட்ட எல்லையில் கார் சிக்கியது. அதனை ஓட்டிச்சென்ற தற்போது ஆத்துபாலத்தில் கால் டாக்ஸி டிரைவராக உள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த முஹமது ஹாரூன், 32 என்பவரை கைது செய்தனர்.



தொடர்ந்து நடத்திய விசாரணையில், கத்தியால் குத்தியது முஹமது ஹாரூன் என்பதும், உடனிருந்தது குறிச்சியை சேர்ந்த கார் டிரைவர் விக்ரமன், 24 என்பதும் தெரிந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement