வீட்டில் கைத்துப்பாக்கி பதுக்கிய மூவர் சிக்கினர்

ஆம்பூர்: வேலுாரில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த நான்கு கைத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து, அக்கா, தம்பி உட்பட மூவரை கைது செய்தனர்.

வேலுார், கொணவட்டத்தில் ஒரு வீட்டில் கைத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட வீட்டில், போலீசார் நேற்று சோதனை நடத்தியதில், நான்கு கைத்துப்பாக்கிகள் சிக்கின.

விசாரணையில், வீட்டிலிருந்த பெண் அஜுரா, 31, தன் தம்பியான, திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பைச் சேர்ந்த, ஷூ கம்பெனி தொழிலாளி ஆசிப், 28, என்பவர், கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்து வைத்ததாக தெரிவித்தார்.

அதன்படி, போலீசார், ஆம்பூர் சென்று ஆசிப்பை பிடித்து, ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

கைத்துப்பாக்கிகள் எங்கிருந்து வாங்கப்பட்டது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆசிப் கொடுத்த தகவலின்படி, மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

Advertisement