கோட்டை மாரியம்மனுக்கு புதிய தேர் வௌ்ளோட்டம்

சேலம்:சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலுக்காக, புதிதாக உருவாக்கப்பட்ட மரத்திலான தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி மாத்தில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது, உற்சவர் அம்மனுக்கு திருவீதி உலா நடத்தப்படும். 'கோட்டை மாரியம்மனுக்கு தேரோட்டம் நடத்த வேண்டும்' என, பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, நன்கொடையாளர்கள் மற்றும் கோவில் நிதி மூலம், 1 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக மரத்திலான தேர் செய்யப்பட்டது. ஆடித்திருவிழாவிற்கு ஒரு மாதமே உள்ள நிலையில், புதிய மரத்தேருக்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

புதிய தேருக்கு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் கலசம் தேரில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். வெள்ளோட்டத்தை முன்னிட்டு, திருத்தேரின் முன், மாணவியர் மற்றும் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் வேடமணிந்த பக்தர்கள் நடனமாடி சென்றனர். தொடர்ந்து, பெண்களின் கோலாட்டம் நடந்தது.

அங்கு கூடியிருந்த பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோட்டை மாரியம்மன் ராஜகோபுரம் முன் துவங்கிய வெள்ளோட்டம், முதல் அக்ரஹாரம், ராஜகணபதி கோவில் வழியாக, 2வது அக்ரஹாரம், பட்டை கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.

Advertisement