தேர்தல் பிரசாரத்தை துவக்கினார் பழனிசாமி

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து அ.தி.மு.க., சார்பில் தேர்தல் பிரசாரம் நேற்று துவங்கியது. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமை வகித்தார்.

இதில், பா.ஜ., சார்பில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் முருகன் பேசுகையில், ''ஜெ., ஆசியுடன் இப்பயணத்தை துவக்கியுள்ளனர். ஊழல் தி.மு.க., அரசை வீட்டுக்கு விரட்டுவோம்,'' என்றார்.

தமிழக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா, பழனிசாமி ஆகியோர் மக்களை காப்போம் என்று ஒரே அணியில் திரண்டுள்ளனர். இந்த இயற்கை கூட்டணி, ஆட்சி அமைக்கும். நாளைய முதல்வர் பழனிசாமி. இந்த பயணத்துக்கு பா.ஜ., ஆதரவு அளிக்கும்,'' என்றார்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசுகையில், ''பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., எப்படி கூட்டணி வைத்தது என முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சி கொடுக்க, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்,'' என்றார்.

ஊட்டி சாலையில், 100 மீட்டர் துாரத்துக்கு பழனிசாமி நடந்து வந்து, மக்களின் வரவேற்பை ஏற்றார். எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், வானதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement