நெல்லையப்பர், கண்டதேவி கோவில்களில் தேரோட்டம் கோலாகலம்

10


திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து வழிபட்டனர்.


திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ஆனிப் பெருந்திருவிழா ஜூன்., 30ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.


விழாவின் தொடக்கமாக அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து வழிபட்டனர். திருநெல்வேலியில் 4 ரத வீதிகளிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.


கண்டதேவி கோவில் தேரோட்டம்




சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆனி தேரோட்டம் என்பது சிறப்பு வாய்ந்த ஒன்று. இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் 1998ம் ஆண்டு தேரோட்டம் நின்றது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் 2002 முதல் 2006 வரை தேரோட்டம் நடைபெற்றது.



அதன் பின்னர், ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்தாண்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு ஆனி திருவிழா ஜூன் 30ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இன்று தேரோட்டம் தொடங்கி உள்ளது.


தேரோட்டத்தை ஒட்டி, கிட்டத்தட்ட 2000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜாதிரீதியான அடையாளங்கள், ஆடைகள் அணியக்கூடாது, வெள்ளை நிற வேட்டி, சட்டை மட்டுமே அணிய வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.

Advertisement