கொசு ஒழிப்பிலும் வந்துவிட்டது ஏ.ஐ.,

அமராவதி: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசு உற்பத்தியை தடுக்கும் திட்டத்தை சோதனை முறையில் ஆந்திர அரசு மேற்கொள்ள உள்ளது.

ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டு உள்ளது.

கொசு உற்பத்தி அதிகம் உள்ள பகுதிகளை கண்காணிக்கவும், அதன் இனங்களை கண்டறியவும், சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லி தெளிப்பை செயல்படுத்தவும், கொசு கண்காணிப்பு அமைப்பு கட்டுப்பாட்டு ஸ்மார்ட் திட்டத்தை சோதனை முறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்சார்கள், ட்ரோன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.

இணைய வழி இணைக்கப்பட்ட சென்சார்கள் வாயிலாக, கொசு அதிகள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படும்.

விசாகப்பட்டினம், விஜயவாடா, காக்கிநாடா, ராஜமஹேந்திரவரம், நெல்லுார், கர்னுால் ஆகிய ஆறு நகராட்சிகளில் உள்ள 66 பகுதிகளில் பரீட்சார்த்த முறையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படஉள்ளது.

டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய் பரவல் மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த தகவல்கள் மருத்துவமனை வாயிலாக பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட இடங்களில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement